tamilSchoolImage
    

காகமும் வடையும்

ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தார். அவர் தன் தொழிலாக வடை சுட்டு விற்று வந்தார். ஒரு நாள் இவர் வடை சுட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு காகம் பசியால் உணவு தேடி அவ்வழியால் வந்தது. அது பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தது. அதிலொரு வடையைத் திருட சந்தர்ப்பம் பார்த்து அருகில் காத்திருந்தது. பாட்டி சற்றே ஏமாந்த நேரம் பார்த்து வடையொன்றைக் கவ்விக் கொண்டு பறந்தது. பாட்டி காகத்தைத் திட்டி விட்டு மீண்டும் வடை சுடலானார்.

வடையத் திருடிய காகம் அதை ஆற அமர்ந்து உண்பதற்காக ஒர் மரத்தில் வந்து அமர்ந்தது. வடையை உண்ணத் தொடங்கும் போது அங்கே ஒரு நரி வருவதைக் கண்டது. நரியும் காகத்தையும் அதன் வாயில் இருந்த வடையையும் கண்டது. அந்த வடையைத் தான் காகத்திடமிருந்து எப்படிப் பெறலாம் என்று யோசித்தது. காகத்தைத் தந்திரமாகப் பேசி ஏமாற்றுவோம் என்று எண்ணியது.

உடனே காகத்தை பார்த்து, "காக்கையாரே, காக்கையாரே, நீர் ஒரு அழகான பறவை. உமது அழகான குரலால் ஒரு பாட்டுப் பாடும், கேட்கிறேன்" என்று வஞ்சகமாகச் சொன்னது. நரியின் புகழ்ச்சியில் மயங்கிய காகமும், வாயைத் திறந்து கா என்று பாடத் தொடங்கியது. காகம் பாட வாயைத் திறந்ததும் அதன் வாயிலிருந்த வடை கீழே விழுந்தது. இதற்காகக் காத்திருந்த நரி, விழுந்த வடையைக் கவ்விக் கொண்டு ஓடியது. காகம் ஏமாந்து போனது.

எத்தனுக்கு எத்தன் எங்கும் உண்டு

    
e-mail: info@ottawatamilschool.org           Ottawa, Canada          www.ottawatamilschool.org